காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் ! 11 ஆண்டுகள் கழித்து சிக்கினார்
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் கணவனைக் கொலை செய்த பெண் 11 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினரிடம் சிக்கினார்.
சுதா என்ற பெண் ஏராளமான ஆண்களுடன் பழகி வந்ததை அவரது சகோதரர் ரவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அடியாட்கள் மூலம் சகோதரரை கொலை செய்ய சுதா முயன்றுள்ளார். இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். வெளி நாட்டில் கொத்தனார் வேலைப்பார்த்து வந்த இவர் கழிந்த 2002 ஆம் ஆண்டு அதேப்பகுதியைச் சேர்ந்த சுதா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உண்டு. இந்நிலையில் கடந்த 2007 முதல் ராஜசேகரை காணவில்லை. இது குறித்து ரவி தனது தங்கையிடம் கேட்டபோது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறியுள்ளார். எனினும் ரவி தனது தங்கையின் கணவரை காணவில்லை என தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 10-வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதற்கு பிறகு சுதா பல வாலிபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு செல்வ செழிப்போடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை கண்காணித்த சுதாவின் சகோதரர் ரவி அவரை கண்டித்ததாகவும் தொடர்ந்து அவரது கணவரை பற்றி விசாரித்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் பள்ளியாடியை சேர்ந்த ஆன்லின்சிபு என்பவரின் தலைமையில் ஒரு கும்பல் சுதாவின் சகோதரர் ரவியை கடத்தி கொலை செய்ய முயன்றது. அந்த கும்பலிடமிருந்து தப்பி வந்த ரவி, தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரில் தனது தங்கை தவறான வழியில் செல்வதை தட்டிக்கேட்டதற்காக தன்னை தனது சகோதரியே ஆன்லின்சிபுவின் கும்பல் மூலம் கொலை செய்ய முயன்றதாகவும் ஆன்லின்சிபுவுடன் தனது தங்கைக்கு பழக்கம் ஏற்பட்ட பின்னர் தான் அவரது கணவர் ராஜசேகரை காணவில்லை என்றும் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுதாவை கைது செய்தனர்.
இந்நிலையில் ராஜசேகர் மாயமான வழக்கை தனிப்படை விசாரிக்க எஸ்.பி.ஸ்ரீநாத் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சுதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுதா தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்த நிலையில், போலீசார் சுதாவுடன் நெருக்கமாக இருந்த சில வாலிபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் சுதா தனது கணவரை கொன்று தனது வீட்டு கழிப்பறை செப்டிக் டேங்கில் புதைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து 17-02-2018 அன்று தக்கலை போலீசார் அதிகாரிகள் முன்னிலையில் சுதாவின் வீட்டு கழிப்பறை செப்டிக் டேங்கை திறந்து, கொன்று புதைக்கப்பட்ட ராஜசேகரின் எலும்புக்கூடை மீட்டனர்.
தொடந்து விசாரணை நடத்திய போது, இது தனது கணவரின் எலும்பு கூடு இல்லை எனவும் அவர் வெளிநாட்டில் தான் இருக்கிறார் என்றும் சுதா மறுப்பு தெரிவித்தார். அந்த எலும்புக்கூடு தடயவில் மற்றும் பல்வேறு சோதனைக்காக பெங்களூரில் உள்ள தடயவியல் சோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த சோதனை முடிவில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுதாவின் கணவர் ராஜசேகருடையது என்பது உறுதியானது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தக்கலை போலீசார் முதல் குற்றவாளியாக சுதாவை சேர்த்து 13-ம் தேதி கைது செய்து விசாரைணை நடத்தினர். விசாரணையில், பள்ளியாடியை சேர்ந்த ஆன்லின்சிபு உடன் இணைந்து தனது கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொன்றார். நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுதா, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.