ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளவர்களை துன்புறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்ற கேள்வி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்க கூடாது எனவும் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அதில்,"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீண்ட காலமாக மக்கள் போராடி வருகிறார்கள். இது தொடர்பான போராட்டத்தில் 2018 மே 22-ல் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.200 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியும் 4 மாதத்திற்குள்ளாக விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் 14ல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. டிசம்பர் 14ஆம் தேதியோடு கால அவகாசம் முடிவடைந்து ஐந்து மாதங்கள் ஆன நிலையிலும், இது தொடர்பாக பெயரைக் குறிப்பிட்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கொண்ட ஒரு நபர் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி பெல் ஹோட்டலில் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை நினைவஞ்சலி கூட்டம் நடத்தவும், அதில் 500 பேர் பங்கேற்கவும் அனுமதி வழங்கினர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், துணை ஆட்சியரும் 107 மற்றும் 111 ஆகிய பிரிவுகளின்கீழ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளனர்.அதே போல சிலரிடம் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள உறுதிமொழிப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் தெரிவித்துள்ளனர். இதுபோல சம்மன் அனுப்பி பொதுமக்களை தொந்தரவு செய்தது சட்டவிரோதமானது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது 107 மற்றும் 111 ஆகிய பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களை மீது தொடர் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த தடைவிதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், ஹேமலதா அமர்வு, "சட்டவிரோத கைது நடவடிக்கைகளை நிறுத்துங்கள், ஸ்டெர்லைட் போராட்டங்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் குற்றவாளிகள் என முடிவுக்கு வந்தது எப்படி என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, போராட்டம் அடிப்படை உரிமை என குறிப்பிட்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில்,அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்? அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? அச்சுறுத்துவதா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது எனவும், இந்த பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.