தொடர் சரிவில் தங்கம்.. திடீர் விலை குறைவுக்குக் காரணம் என்ன? மேலும் உயருமா?
உச்சத்தில் இருந்த விலை கடந்த சில நாட்களாக திடீர் சரிவை சந்தித்தது. அந்த வகையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாயாக உள்ளது. தங்கம், வெள்ளி விலை சரிவுக்குக் காரணம் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் தொடர்பான பரிந்துரை எனக் கருதப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகள், வெனிசுலா மீதான படையெடுப்பு, ஈரான் உடனான போர்ச் சூழல் உள்ளிட்டவை தங்கம்,வெள்ளி முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் உச்சத்தில் இருந்த விலை கடந்த சில நாட்களாக திடீர் சரிவை சந்தித்தது. அந்த வகையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாயாக உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 120 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 80 ஆயிரமாகவும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 280 ஆகவும் உள்ளது. அதேநேரத்தில், தங்கம் விலையில் தற்போது காணப்படும் சரிவு தற்காலிகமானது என்றும், நடப்பு ஆண்டில் தங்கம் விலை தொடர் ஏற்றத்தைக் காணும் என்றும் சர்வதேச நிதி நிறுவனமான யுபிஎஸ் தெரிவித்துள்ளது. உலகச் சந்தையில் தங்கத்தின் ஏற்றம் இன்னும் முடியவில்லை. குறுகிய காலகத்தில் தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டாலும், நடப்பு ஆண்டின் மத்திக்குள் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் சவரன் 1 லட்சத்து 44 வரையிலும் ஏற்றம் காணும். வெள்ளி விலை தொடர் ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை சரிவுக்குக் காரணம் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் தொடர்பான பரிந்துரை எனக் கருதப்படுகிறது. கெவின் வார்ஷ் என்பவரை அமெரிக்க ரிசர்வ் வங்கியின் அடுத்த தலைவராக நியமிக்க அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்ததே விலை சரிவுக்குத் தூண்டுதலாக அமைந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். வார்ஷ் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கண்டிப்பானவர் எனக் கருதப்படுவதால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பொதுவாக, டாலர் வலுவடைந்தால் தங்கம், வெள்ளி விலைகள் குறையும். மேலும் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களும் அமெரிக்க டாலர் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
2026-2027ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இனி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டுவரும்போது அதன் எடை மட்டுமே மதிப்பில் கொள்ளப்படும் என்றும், தங்கத்தின் விலை மதிப்பீடு செய்யப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் தங்கம் வாங்குவதை விடவும் துபாய் போன்ற வெளிநாடுகளில் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க முடியும் என்ற நிலை நிலவுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை சட்டவிரோதமாக கடத்துவது அதிகரித்தது. எனவே, வெளிநாடுகளில் இருந்து சட்டப்படி தங்கத்தை வாங்கிக் கொண்டுவருவதற்கான விதிமுறைகள் 2016ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெண்கள் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தங்கமும், ஆண்கள் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான தங்கமும் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து விமானம் அல்லது கப்பலில் பயணித்து கொண்டுவர முடியும். இப்போது தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்துள்ளதால் இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, இப்போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், பெண்கள் வெளிநாடுகளில் இருந்து தலா 40 கிராம் எடைகொண்ட தங்கத்தை கொண்டுவரலாம், ஆண்கள் 20 கிராம் எடையுள்ள தங்கத்தை கொண்டுவரலாம். ஆனால், வெளிநாடுகளில் தங்கம் வாங்கப்பட்டதற்கான முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும். மேலும் விமானம், கப்பல் ஆகியவற்றில் பயணித்து வருபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும், சாலை வழியே பயணிப்பவர்களுக்கு இது பொருந்தாது.

