\
மெரினாவில் குளித்தால் ஆபத்து: ஆய்வில் தகவல்

மெரினாவில் குளித்தால் ஆபத்து: ஆய்வில் தகவல்

மெரினாவில் குளித்தால் ஆபத்து: ஆய்வில் தகவல்
Published on

மெரினா கடற்கரையில் கடலில் குளிப்பதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் வரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய கடல் ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் சென்னையில் உள்ள ஐந்து கடற்கரைகளில் நீரில் மாசு அதிகம் உள்ளது என்றும் அதில் மெரினா முதல் இடத்தில் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியே சுத்திகரிக்கப்படாத கழிவுகள் தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகள் அதிகரித்து நீர் மாசடைந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

சென்னையில் உள்ள 5 கடற்கரைகளில் இருந்து 192 மாதிரிகளை சேகரித்து, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய ஐந்து பகுதிகளில் இருந்து கோடை மற்றும் மழைக் காலங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதில் மெரினாவில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில் அதிக அளவில் பாக்டீரியா இருந்தது தெரியவந்துள்ளது. 

ஓப்பிட்டு அளவில் கோவளம் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில் குறைந்த அளவு மாசு கலந்துள்ளதாகத் தெரிய வந்தது. கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுவதே கடல் நீர் மாசுபடாமல் தடுக்க ஒரே வழி என மத்திய கடல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நுண்கிருமிகள் நீரில் கலப்பதால் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்னை, வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com