அதிமுக தலைமைக் கழகத்தின் சாவி யாருக்கு? போட்டிபோடும் ஓபிஸ் மற்றும் ஈபிஎஸ்

அதிமுக தலைமைக் கழகத்தின் சாவி யாருக்கு? போட்டிபோடும் ஓபிஸ் மற்றும் ஈபிஎஸ்
அதிமுக தலைமைக் கழகத்தின் சாவி யாருக்கு? போட்டிபோடும் ஓபிஸ் மற்றும் ஈபிஎஸ்

அதிமுக தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி கே பழனிசாமியிடமே ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் இரட்டை தலைமை என்கிற நிலைமையை மாற்றி ஒற்றைத் தலைமை தான் தேவை என்று தொண்டர்கள் விரும்புவதாகக் கூறி அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாலராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளாரக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் இல்லாமல் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் முழுவதுமாக ஒதுக்கப்பட்டு அதிமுக கட்சியின் அனைத்து முடிவுகளும் இனி பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரத்தின் கீழ்தான் எடுக்கப்படும் என்று கட்சி பெருந்தலைகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும்  எடப்பாடி கே பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும்  இடையே  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையில் வட்டாட்சியர் முன்னிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி கே பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எடுத்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 20ஆம் தேதி அளித்த தீர்ப்பில் அதிமுக தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி கே பழனிசாமி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. மேலும் அடுத்த ஒரு மாதத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் அதற்கான போதிய பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி கே பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் ஓ பன்னீர்செல்வத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்களைக் கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com