“இந்தாம்மா, ஏய்..” - உதவி இயக்குநர் to நடிகர்.. மறைந்த மாரிமுத்து கடந்து வந்த 30 வருட சினிமா பயணம்!

சினிமா ஆசையால் சிறுவயதிலேயே சென்னைக்கு வந்த அவர், 1990களில் தொடங்கி இயக்குநர்கள் ராஜ்கிரண், மணிரத்னம், சீமான், வசந்த் உள்ளிட்டோருடன் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
ஜி மாரிமுத்து
ஜி மாரிமுத்து PT

திரைப்பட இயக்குநரும் நடிகருமான தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜி. மாரிமுத்து சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே சிங்கராஜபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பசுமலைத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜி.மாரிமுத்து.

சினிமா ஆசையால் சிறுவயதிலேயே சென்னை வந்த அவர், அப்போது இயக்குநர்களாக ஜொலித்த ராஜ்கிரண், மணிரத்னம், சீமான், வசந்த் உள்ளிட்டோருடன் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

கண்ணும் கண்ணும் - இயக்குநராக அறிமுகம்

நீண்ட காலம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து 2008 ஆம் ஆண்டு பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை கொடுத்தது. வடிவேலு காமெரி இன்றளவும் எவர் க்ரீன். இதனையடுத்து 2014 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் புலிவால் படம் ரிலீஸ் ஆனது.

இயக்குநர் டூ நடிகர் - ஏற்றம் கொடுத்த பரியேறும் பெருமாள்

படங்கள் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாததால் நடிப்பு துறையில் களம் இறங்கினார். குணச்சித்திர வேடங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகி ஆனந்தியின் தந்தையாக நடித்தார். அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக க்ளைமேக்ஸில் வரும் காட்சி பெரிய வெகுவாக பாராட்டப்பட்டது.

தமிழ் குடும்பங்களில் சென்று சேர்த்த சின்னித்திரை கதாபாத்திரம்

திரைப்பட துறையை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரையில் வெளியாகும் எதிர்நீச்சல் மெகா சீரியல் மூலம் மிக பிரபலமாக பேசப்பட்டார். குறிப்பாக “இந்தாம்மா.. ஏய்..” என இவர் சீரியலில் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறது.

குடும்பப் பின்னணி

மாரிமுத்து மனைவி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வந்தார். சொந்த ஊரில் சகோதரர் லட்சுமணன் உள்ளிட்ட உறவினர்கள் மட்டும் உள்ளனர்.

சமீபத்தில் ரஜினி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான "ஜெயிலர் " திரைப்படத்தில் வில்லனுக்கு வலது கையாக, உதவியாளராக படம் முழுக்க வந்து நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

உயிரிழப்பிற்கு சற்று முன்பாக..

தான் நடித்து வந்த எதிர்நீச்சல் மெகா சீரியலுக்கான டப்பிங் பணி முடிந்து வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்தார். இவரது சொந்த ஊரான பசுமலைத்தேரி கிராமத்தில் மாரிமுத்துவின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

சென்னையிலுள்ள வீட்டிலும் மாரிமுத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வைரலாகும் மாரிமுத்துவின் வீடியோக்கள்

சமீபத்தில் இவரது பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. சீரியலில் அவர் நடித்த சில காட்சிகளை ட்ரோல் மெட்டீரியலாக பயன்படுத்தினர். லைம் லைட்டில் இருந்து வந்த நிலையில், அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com