நடிகர் விஜய் நடித்த படங்களை பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் பேசியிருந்த நிலையில், அவரை கண்டித்து மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற துறவியர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை ஆதீனம், "நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும் இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்க கூடாது" என பேசியிருந்தார்.
ஆதீனத்தின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், "எச்சரிக்கை! மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?" "வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மதுரை ஆதீனம் சமீப காலமாக பேசி வரும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவரும் சூழலில், தற்போது நடிகர் விஜய் ரசிகர்கள் தெரிவித்த கருத்தும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆதினத்தை யாருக்கோ யாரோ விடும் வில்லின் அம்பாக மாற்றக் கொண்டிருக்கிறார்கள் என்றும் முந்தைய வரலாற்றை மறந்து அவரது கடையாணியை அவரே களற்றி கொண்டிருக்கிறார் என்றும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திராவிட இயக்கம் இல்லையென்றால் ஆதினங்களே இருக்க முடியாது என்ற வரலாறு புதிதாக பொறுப்பேற்று வந்திருக்கும் மதுரை ஆதினத்திற்கு தெரியாது.
சூத்திரர்கள் சன்னியாசியாவதற்கு உரிமை இல்லை என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அதையெல்லாம் பற்றி கவலை படாமல் ஆதினங்களை அங்கிகரித்திருப்பதே இந்த அரசு தான். அதைப்பற்றியெல்லாம் புரிந்து கொள்ளாமல் யாருக்கோ யாரோ விடும் வில்லின் இவர்கள் அம்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் மதுரை ஆதினம் தன்னுடைய உணர்வுகளுக்கு திரும்ப வேண்டும், திரும்புவார்” என்றார்.
இதையும் படிக்கலாம்: யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கியது சென்னை பூந்தமல்லி நீதிமன்றம்