வாட்ஸ் அப் உங்கள் நண்பன் ! உதவும் இளைஞர்கள் குழு
இயலாதவருக்கு இயன்றதை உதவி வரும் சாயல்குடி ‘உங்கள் நண்பன் வாட்ஸ் அப் குழு’. பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி பொதுச்சேவைக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட்போனே இல்லை எனலாம். அந்த அளவுக்கு வாட்ஸ் அப்பின் பயன்பாடு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. குறுஞ்செய்தி அனுப்புவதில் தொடங்கி இணையத்தைப் பயன்படுத்தி எந்த நாட்டில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு பேசுவது வரை வாட்சப் நுழையாத இடம் இல்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை வாட்சப் என்றாலே, நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது நண்பர்களுடன் அரட்டையடிப்பது, தங்களுக்கு வரும் செய்தி மற்றும் தகவல்களை உண்மையா பொய்யா என்று ஆராயமலே பிறருக்கு பார்வர்டு செய்து, பொழுதுபோக்கு அம்சங்களை பகிர்வது என்பது மட்டுமே நினைவுக்கு வரும்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ‘உங்கள் நண்பன் வாட்ஸ் அப் குழு’ என்னும் வாட்ஸ் அப் குழு மூலம் இயலாதவர்களுக்கு இயன்ற நலத்திட்டங்களை உதவி செய்து வருகின்றனர் அப்பகுதி இளைஞர்கள். உதாரணமாக, உடல் உறுப்புக்கள் அனைத்தும் செயல் இழந்து யாருடைய ஆதரவுமின்றி தவித்து வரும் தேனி சந்திரசேகருக்கு 20ஆயிரம் ரூபாய் பணமும் 5 ஆயிரம் மதிப்புள்ள உடமைகளையும் தந்து உதவி செய்துள்ளனர். இவர்கள் இக்குழு மூலம் மேலும் மேலும் உதவிக்கரங்கள் நீட்ட தயாராகி வருகின்றனர். உங்கள் நண்பன் சாயல்குடி வாட்ஸ் அப் குழு.
இதுகுறித்து உங்கள் நண்பன் வாட்ஸ் அப் குழு உறுப்பினர்கள் கூறும்போது, இந்தக் குழு முழுக்க முழுக்க இயன்றதை இல்லாதவர்களுக்கு செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டது. வாட்ஸ் அப் என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல பொதுச்சேவையும் செய்யலாம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த, சாயல்குடியில் செயல்பட்டு வரும் உங்கள் நண்பன் வாட்ஸ் அப் குழு மூலமாக, தங்களின் கவனத்திற்கு வந்த தகவல் உண்மைதானா என்பதை அங்குள்ள நண்பர்கள் மூலம் கண்டறிந்து, தேனியில் வசிக்கும் திரு சந்திரசேகர் என்பவரைச் சந்தித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வந்துள்ளோம். இக்குழுவில், கூலித்தொழிலாளர் முதல் வியாபாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என சாதிமத பேதமின்றி அனைத்துத்தரப்பினரும் இணைந்துள்ளனர்.
மேலும், இக்குழுவை முறையாக பதிந்து மாதந்தோறும் சந்தா வசூல் செய்து இயலாதவர்களுக்கு இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து, மற்ற வாட்சப் குழு நண்பர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம் என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தாங்கள் இதை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவது விளம்பரத்திற்காக அல்ல, தங்களைப்பார்த்து மற்ற வாட்சப் குழுவினரும் பொழுதுபோக்கிற்காக மட்டும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமான விசயங்களுக்காகவும் பயன்படுத்த முன்வர வேண்டும் என்பதற்காகத்தான் எனவும் கூறுகின்றனர்.
தகவல்கள் ( பா.லிங்கேஸ்வரன் )