பாஜகவின் கேசவ விநாயகம் மாற்றம்.. பின்னணியில் உள்ள காரணம் என்ன?
பாஜக அமைப்புப் பொதுச் செயலராக 2015 முதல் நீடித்து வந்த கேசவ விநாயகம் திடீரென மாற்றப்பட்டது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக அமைப்புப் பொதுச் செயலராக 2015 முதல் நீடித்து வந்த கேசவ விநாயகம் திடீரென மாற்றப்பட்டது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகால உள்கட்சிப் மோதல்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் அதிருப்தியே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் நீடித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜிக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதை கேசவ விநாயகம் கண்டித்ததும், யாத்திரை தொடர்பான கணக்கு வழக்குகளை கேள்வி எழுப்பியதும் மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
முன்பு அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதும், கேசவ விநாயகத்துடன் உரசல் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, கேசவ விநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து பாஜக மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான தேர்தல் சுற்றுப்பயணப் பொறுப்பாளர்கள் பட்டியல் தொடர்பாகவும் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக விதிமுறைகளின்படி, RSS மூலம் நியமிக்கப்படும் அமைப்புப் பொதுச்செயலர் பதவி கட்சியின் நிர்வாக மற்றும் கொள்கை முடிவுகளில் முக்கிய அதிகாரம் கொண்டதாகும்.

