”இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரவு”-போட்டி போட்டு காய் நகர்த்தும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

”இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரவு”-போட்டி போட்டு காய் நகர்த்தும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

”இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரவு”-போட்டி போட்டு காய் நகர்த்தும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்த நிலையில், அந்த தொகுதிக்கு வரும் 27.02.2023 அன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டு தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக்கூறி வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவின் தலைமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு அணிகளும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓ.பன்னீர்செல்வம், செந்தில்முருகன் என்பவரை தங்கள் தரப்பு வேட்பாளராக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டுமென இபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இடைத் தேர்தலில் போட்டியிட இரு தரப்பும் விரும்புவதால், கட்சியின் அவைத் தலைவர், பொதுக்குழுவைக் கூட்டி பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினால், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யட்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ள பன்னீர்செல்வம், ’அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற தன்னுடைய பொறுப்பு, நீடிப்பதற்கு எந்த தடையையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விதிக்கவில்லை’ என கூறியுள்ளார். அதே நேரத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் பழனிசாமியை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. இந்த இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் தன்னுடைய தொண்டர்களும் பாடுபடுவோம் என அவர் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடாது என்று, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு பாஜக முழுமையான ஆதரவை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை...

”ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே தங்கள் விருப்பம். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் பாஜக நிலைப்பாட்டை எடுக்கும். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம். மக்கள் நலன்கருதி செயல்படுமாறு பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம். பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு பன்னீர்செல்வத்திடம் கேட்டுக் கொண்டோம்” என அண்ணாமலை தெரிவித்தார்.

அதேபோல் ஒரே வேட்பாளர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அவரது வெற்றிக்கு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றுகேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுத இடைத் தேர்தலில் தென்னரசுவை அதிமுக வேட்பாளராக நியமிக்க ஒப்புதல் கோரி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அக்கட்சி அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் படிவம் அனுப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் முடிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் படிவம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தென்னரசு அவர்களை அதிமுக வேட்பாளராக நிறுத்த சம்மதிக்க என் வாக்கை செலுத்துகிறேன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அவைத்தலைவர் அறிவிக்கும் அதிமுக வேட்பாளரை அங்கீகரித்து பொதுக்குழு நிறைவேற்றும் தீர்மானத்தை தாங்கள் ஆதரிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இச்சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. நாளை இரவு 7 மணிக்குள் படிவத்தை சமர்ப்பிக்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com