ஊரடங்கு காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ள சாலைகளில் விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக போக்குவரத்து தடை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வரும் வாகனங்களின் வரத்து முற்றிலுமாக குறைந்து இருக்கிறது. இதில் கூடலூரில் இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்க கூடிய முக்கிய சாலை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்கிறது.
சாதாரண நாட்களில் இந்தச் சாலை வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும். தற்போது ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் ஏதும் இந்த சாலை வழியாக அனுமதிக்கப்படுவதில்லை.
வனப்பகுதி சாலையில் போக்குவரத்து குறைந்திருப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகவே இதனை கண்காணிக்க முதுமலை வன துறை மூலமாக சாலையோரங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.