பேருந்துகள் முதல் ஜவுளிக் கடைகள் வரை... தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வு வாய்ப்புகள் என்னென்ன?
தமிழகம் முழுவதும் 28-ம் தேதியுடன் கொரோனா ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இதை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கடந்த மே 7-ம் தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36,000-ஐ கடந்தது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்ததன் காரணமாக, அந்த 11 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 23 மாவட்டங்களிலும் ஒரு சில தளர்வுகளுடனும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் 28ம்தேதி வரை 5வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
28-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 6-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கூடுதல் தளர்வுகளுக்கான வாய்ப்புகள்:
11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தளர்வுகள் வழங்க வாய்ப்பு உள்ளது. பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படலாம்.
திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சிறிய கோயில்கள் திறப்பதற்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது.
23 மாவட்டங்களிலும் 50% நகரப் பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளது.
பெரிய கடைகளை குளிர்சாதன் வசதி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதிக்கப்படலாம்.
நூலகம், அருங்காட்சியகத்தை திறக்க வாய்ப்புண்டு.
ஜவுளி மற்று நகைக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதிக்கப்படலாம்.
11 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வாய்ப்புள்ளது.
இவை அனைத்தும் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலை வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஸ்டாலின்