அன்பில் மகேஷின் பதவிக்காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் - முதலமைச்சர் ஸ்டாலின்!
”பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” என்ற விழா கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில், ‘அப்பா’ என்ற செயலியை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.
பிறகு, இதில் பேசிய அவர், ”ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து. கல்வித்துறையில் சாதனைகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறையை இந்திய அளவில் 2-ம் இடத்துக்கு உயர்த்தியவர் அன்பில் மகேஷ். அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் அக்கறை, தமிழக அரசுக்கும் உள்ளது. இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தேசிய கல்விக்கொள்கை என்பது சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை. தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன். கையெழுத்திடும் அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல.. மொழியை திணிக்க நினைத்தால் எதிர்ப்போம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விட மாட்டோம்." என்று பேசியுள்ளார்.