புத்தாண்டில் விவேகத்துடன் கொரோனா சூழலைக் கடக்க வேண்டும்: ஜகி வாசுதேவ்
"தமிழ்ப் புத்தாண்டில் மக்கள் அனைவரும் விவேகத்துடன் செயல்பட்டு, கொரோனா சூழலைக் கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நாம் இந்த 'சார்வரி' வருடத்தில் இருந்து 'பிலவ' வருடத்திற்குள் கால் வைக்கின்றோம். இந்த வருடப் பிறப்பு என்பது நம் தமிழ் கலாசாரத்தில் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இங்கு நாம் சந்திரன், சூரியன் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களின் சுழற்சிகளை பார்த்தும், அந்த கிரகங்களினால் பூமியின் மீது ஏற்படுகின்ற தாக்கம் எப்படி இருக்கின்றது என்பதை வைத்தும் நம் நாட்காட்டியை உருவாக்கியுள்ளோம். இது, நாள் கணக்கு போடும் விசயம் மட்டும் அல்ல; நம்முடைய உடலுக்குள்ளும், சுற்றுச்சுழலில் எந்த மாதிரி மாற்றம் நடந்திருக்கின்றது என்பதை எல்லாம் கவனித்து இந்த நாட்காட்டியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்தப் புத்தாண்டை நீங்கள் அனைவரும் ஆனந்தமாக கொண்டாட வேண்டும். கடந்த வருடம் நமக்கு சவாலான வருடமாக அமைந்திருந்தது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் பல துயரங்களை சந்தித்தனர். பலர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களை இழக்கும் சூழல் ஏற்பட்டது. ஏராளமானவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர்.இப்போது நாம் இந்த பிலவ வருடத்திற்குள் கால் வைக்கப போகிறோம். இந்த பிலவ வருடம் நம்முடைய விவேகத்துடன் சம்பந்தப்பட்டது. இந்த வருடத்தில் தமிழ் மக்கள் தேவையான விவேகத்துடன் கொரோனா சூழ்நிலையை கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்" என்று ஜகி வாசுதேவ் கூறியுள்ளார்.