கருணைக் கொலை வேண்டி 25 இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

கருணைக் கொலை வேண்டி 25 இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு
கருணைக் கொலை வேண்டி 25 இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் தங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட திப்பணம்பட்டி, ஆவுடையனூர், அரியபுரம், கல்லூரணி, சிங்நாடானூர், பூலாங்குளம், வெங்கடாம்பட்டி, புங்கம்பட்டி, மடத்தூர், ஐந்தாம் கட்டளை உள்ளிட்ட ஒன்பது கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இங்கு வசிப்பவர்கள் விவசாயத்தை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். 

இப்பகுதியில் குறைவான நீர் ஆதாரமே இருபதால், நீர் ஆதாராத்தை மேம்படுத்தும் வகையில் ராமநதி - ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் இணைப்பு திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜர் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை 42 கோடிக்கு மறுமதிப்பீடு செய்து முதல் கட்டமாக 5 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்தார். 

இந்நிலையில் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை எவ்விதமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இச்சுழலில் கனவு திட்டமாகவே இருந்து வரும் ராமநதி- ஜம்புந்தி மேல்மட்ட கால்வாய் இணைப்பு திட்டத்தை மீட்க கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட ஒன்பது கிராம பஞ்சாயத்து இளைஞர் ஒன்று இணைந்துள்ளனர்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாத காரணத்தால் குடிநீர் ஆதாரம் கூட இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 51 ஆண்டுகால இந்தத் திட்டத்தை நிறைவேற்றாத பட்சத்தில் தங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சுமார் 25 இளைஞர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்துள்ளனர். 

மேலும் அரசு தொடர்ந்து தாமதிக்காமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் ஊர்மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com