பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும் கட்சியினரையே கைது செய்துள்ளோம்: திண்டுக்கல் சீனிவாசன்
தமிழக அறநிலையத்துறையில் ஜெயலலிதா ஆட்சியின்போது செயல் பட்டதை விட தற்பொழுது துரிதமாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக அறநிலையத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர்கள் பேட்டியளித்துள்ளனர்.
திண்டுக்கல் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக கட்டிடத் திறப்பு விழா இன்று (11.01.21) நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், “இந்து சமய அறநிலைத்துறை மூலம் அனைத்து திருக்கோவில்களும் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகங்கள் நடத்துவதற்கு ஏதுவாக மண்டலங்களை தனித்தனியாக பிரித்து வருகிறோம். தமிழக முதல்வர் பல்வேறு இடங்களில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை தனியாரிடமிருந்து மீட்டுள்ளோம். ஏற்கனவே லண்டனிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் மீட்கப்படும்” என தெரிவித்தார்.
வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், “அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் மட்டுமல்லாமல் வனத்துறைக்கு சொந்தமான இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நீதிமன்றத்துக்கு செல்வதால் ஒரு சில இடங்களில் காலதாமதம் ஏற்படுகிறது.
ஜெயலலிதா இருக்கும் போது இருந்த பயத்தை விட தற்போது அணுகுமுறைகள் வேகமாக இருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் போது கூட மன்னிப்பு கிடைக்கும். இப்ப இருக்கக்கூடிய ஆட்சியில் மன்னிப்பு கிடையாது. தண்டனை என்றால் தண்டனைதான். உதாரணத்திற்கு பொள்ளாச்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்தவரை கைது செய்துள்ளோம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். எல்லாம் சட்டரீதியாக நீதிமன்றம் சென்று தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி நிலங்கள் வனத்துறை மூலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.