அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம்

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம்
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம்

அத்திவரதர் தரிசனத்தை 48 நாட்களுக்கு மேல் நீட்டிக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் குளத்திலிருந்து எழுந்தருளியுள்ள அத்திவரதரின் தரிசனம் ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் மீண்டும் அத்தி வரதர் குளத்திற்குள் வைக்கப்படுவார். அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவரான சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் மனுத் தாக்கல் செய்தார். அனந்தசரஸ் குளத்தை தூர்வாரக்கோரும் வழக்கில் இணைத்து தனது மனுவை விசாரிக்க கோரிக்கை வைத்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அத்திவரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் பரிசீலித்து வருவதாக மனுதாரர் தரப்பில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு தரப்பில், தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என முதல்வர் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவெடுத்து இருப்பதாக அமைச்சரே அறிவித்துள்ளார் என கூறப்பட்டது. எனவே 48 நாட்களுக்கு மேல் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில் தரிசனத்தை நீட்டிக்க கோரும் வழக்கை இணைக்க முடியாது என கூறிய நீதிபதி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக எச்சரித்தார். கோயில் விவகாரம் தொடர்பாக அரசும், அறநிலையத்துறையும் தான் முடிவெடுக்க முடியும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் பக்தர்களின் நலனுக்காக வழக்கு தொடர்வதாக இருந்தால் பொது நல வழக்காக தொடர அறிவுறுத்தினார். நீதிபதி எச்சரிக்கையை அடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைத்ததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com