தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்

தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்
தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தண்ணீர் லாரிகள் உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம‌வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3 நாட்களுக்கு முன் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் நேற்று போராட்டத்தை அறிவித்தனர். இது குறித்து பேசிய தமிழ்நாடு அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முரளி  ''குடிநீர் கேன் உற்பத்திக்காக நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை விலக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். இதனைதொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு  நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து கேன் தண்ணீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் வேலுமணியுடன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு போராட்டங்களும் வாபஸ் பெறப்பட்டதால் சென்னையில் தண்ணீர் பிரச்னை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com