கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்

கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்
கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்

அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம‌வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் நேற்று போராட்டத்தை அறிவித்தனர். இது குறித்து பேசிய தமிழ்நாடு அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முரளி  ''குடிநீர் கேன் உற்பத்திக்காக நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை விலக்க வேண்டும். குடிநீர் என்பது அத்தியாவசியமான ஒன்று. அதனை கருத்தில் கொண்டு குடிநீருக்காக நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். இதனைதொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு  நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார்.

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தே அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் போராட்டம் அறிவித்ததால் குடிநீருக்காக மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் அதனால் போராட்டம் தொடரும் என்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com