"நாள் முழுக்க காத்திருந்தும் ரெம்டெசிவிர் கிடைக்கல" - காத்திருந்த இளைஞர் வேதனை
"நாள் முழுக்க காத்திருந்தும் ரெம்டெசிவிர் கிடைக்கல" - சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காத்திருந்த இளைஞர் வேதனை
கொரோனா தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்படுகிறது. பல இடங்களில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு ஏற்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை திறந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆதார் எண், சிடி ஸ்கேன் விவரம், மருத்துவர் சான்றிதழ் மற்றும் மருந்து வாங்க வந்திருப்பவரின் ஆதார் எண் ஆகியவற்றை வழங்குவோருக்கு ரெம்டெசிவிர் விற்கப்படுகிறது. இதற்காக திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து கூட பலர் சென்னை வந்து காத்திருந்து மருந்துகளை வாங்கி செல்கின்றனர். 5 மணிக்கு விற்பனை முடிந்த பிறகும் நூற்றுக்கணக்கானோர் மருந்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்திருந்த இளைஞர் ஒருவர் பேசும்போது “ரெம்டெசிவிர் மருந்து விலையை வெளியில் வெளியில் ஒரு டோஸுக்கு 16 லிருந்து 24 ஆயிரம் விற்கிறார்கள்” என்றார். மற்றொருவர் பேசும்போது, ”என் அப்பா அம்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் எங்கு கேட்டும் ரெம்டிசிவர் கிடைக்கவில்லை. அதனால், நான் இங்கு ரெம்டிசிவர் வாங்க வரிசையில் காத்திருக்கிறேன். மருந்து வாங்கிக்கொண்டு திருச்சியில் உள்ள எங்க அப்பா, அம்மாவுக்கு கொடுக்கணும்” என்றார்