நம்பிக்கை வாக்கெடுப்பு வீடியோ பதிவு ஸ்டாலின் தரப்புக்கு வழங்கப்பட்டது
நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் அடங்கிய வீடியோ பதிவு ஸ்டாலின் தரப்புக்கு வழங்கப்பட்டதாக பேரவைத் தலைவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான வழக்கு இன்று தலைமை பொறுப்பு வகிக்கும் நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் மற்றும் நீதிபதி சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சட்டப்பேரவையின் நிகழ்வுகள் அடங்கிய வீடியோ பதிவுகள் முக.ஸ்டாலின் தரப்பிற்கு வழங்கப்பட்டுவிட்டதாகப் பேரவைத் தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சபாநாயகரின் அதிகாரம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்ததாகவும், அதனடிப்படையில் திமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றிவிட்டு பின்னர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
பேரவைத் தலைவரின் விதிமீறல்களால்தான் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் என்பதால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. சபாநாயகரின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் மக்கள் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்படும். எனவே, வழக்கு முடியும் வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்க அனுமதிக்கக்கூடாது எனவும் முக.ஸ்டாலின் தரப்பு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இரண்டு தரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர்களின் வாதத்திற்காக வழக்கை வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.