செங்கோட்டையன் வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள் - ஆலோசனை கூட்டம் எதுவும் நடக்கவில்லை என விளக்கம்
செய்தியாளர்: சுப்ரமணியம்
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச ;செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.ஏ..செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இந்த விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத நிலையில், எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இந்த பிரச்னை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் இரண்டு உதவி ஆய்வாளர் மற்றும் 2 போலீஸார் அடங்கிய குழுவினர், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையனை காண அவரது இல்லத்தின் முன்பு குவிந்தனர். அத்திக்கடவு - அவினாசி திட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்து பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்... அந்தியூர் பகுதியில் நடைபெற இருக்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக் கூட்டத்திற்கு அழைப்புகள் வழங்க அ.தி.மு.க நிர்வாகிகள் வந்துள்ளனர். ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. தினமும் அதிமுக நிர்வாகிகள் தன்னை சந்திக்க வருவதாகவும் இது வழக்கமாக நடைபெறும் ஒன்று எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.