2026 தேர்தல் | தவெகவுடன் கூட்டணியா.. தனித்துப் போட்டியா? சசிகலாவின் திட்டம் என்ன?
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாததால், 2026 தேர்தலில் தனித்து களமிறங்க வி.கே.சசிகலா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாததால், 2026 தேர்தலில் தனித்து களமிறங்க வி.கே.சசிகலா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியையும், திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர்,அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேநேரம், கடந்த 2022ஆம் ஆண்டு திவாகரன் தனது கட்சியை சசிகலா தலைமையின்கீழ் கொண்டுவந்தார்.
இந்த நிலையில்தான், 2026 தேர்தலில் சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களை தனித்துப் போட்டியிட வைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லது சசிகலாவின் ஆதரவாளர்கள், திவாகரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிடர் கழக வேட்பாளர்களாக 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி, விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள சசிகலா, அப்போது தனது இறுதி முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வாயிலாக தவெக கூட்டணிக்கு சசிகலா தரப்பு முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

