திருச்சியில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
பேருந்தில் 57 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அதிகாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே திடீரென டீசல் இல்லாமல் சாலையின் நடுவே நின்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து படியில் இருந்த சிலர் கீழே இறங்கியுள்ளனர்.
பேருந்தில் எந்த வித இண்டிகேட்டரும் போடவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதி வேகமாக இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் நின்ற அரசு பேருந்தின் பின்னால் பலமாக மோதியது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. சிவகங்கையை சேர்ந்த சின்னதம்பி, சரக்கு வாகனத்தில் வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த க்ளீனர் அஜாஹருல் இஸ்லாம்(19) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 10த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் இறந்தவர்கள் யார் எப்படி விபத்து ஏற்பட்டது என்ற விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.