மயானம் இருக்கு ஆனால் பாதை இல்லை - 20 ஆண்டுகளாக போராடும் மக்கள்
மயானம் செல்ல பாதை கேட்டு 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சடலத்தை வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட வீரசோழபுரம் என்னும் கிராமத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானம் இருந்த போதிலும் அங்கு செல்வதற்கான பாதை இல்லாததால் சுமார் 20 வருடங்களாக பாதை கேட்டு போராடி வருகின்றனர்.
மயானத்திற்கு செல்வதற்கு முன்னதாக இவர்கள் தனியார் வயல்கள் வழியே கடக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும் இதனால் சடலங்களைக் கொண்டு செல்லும் போது தொடர்ந்து நில உரிமையாளரிடம் தகராறு ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வட்டாட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் நேற்று இறந்துபோன மயிலான் என்பவரின் சடலத்தை வைத்து கிராம மக்கள் பாதை கேட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஜெயலட்சுமி ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.