விழுப்புரம் | ஏரி வாய்க்காலை தூர்வார வைத்த வெடி - பறந்து வந்த கல் தாக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு
செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அருகே உள்ள டி. கொசப்பாளையம் கிராமத்தில் ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்வாயில் நீர் வெளியேறத் தடையாக இருந்த பாறையை வெடிவைத்து அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பாறையை அகற்ற வைத்த வெடி, வெடித்துச் சிதறியது. ஆதில், ஏரியின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரியின் தலையில் பாறை விழுந்தது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கஞ்சனூர் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வெடி விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உரிய அனுமதியின்றி ஊராட்சி மன்றத் தலைவர் பாறைக்கு வெடி வைத்தபோது சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.