டோலி கட்டி தூக்கிச்சென்ற கிராம மக்கள்... என்று தீரும் இந்த அவலம்!
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
வாணியம்பாடி அருகே தொடரும் அவலம். சுதந்திரம் அடைந்து, பல ஆண்டுகாலம் ஆகியும், மலைக்கிராமத்தில், முறையான சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்திலிருந்து உடல் நலக்குறைவால் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர், மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு.
இறந்தவரின் உடலை நள்ளிரவில் டார்ச் லைட் அடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும், 7 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான சாலையில் டோலி கட்டி தூக்கிச்சென்ற கிராம மக்கள். ஆட்சிகள் மாறினாலும், தங்களது அவலம் மாறவில்லையென மலைகிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமமான நெக்னாமலை மலைகிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நெக்னாமலை மலைகிராமத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரம் மலைச்சாலையில் நடந்தே வந்து, வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, கோவிந்தனின் உறவினர்கள், நெக்னாமலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் மேற்க்கொண்டு, நெக்னாமலை அடிவாரத்தில், முதியவர் கோவிந்தனின் உடலை டோலி கட்டிக்கொண்டு இறுதி சடங்குகள் செய்து, நள்ளிரவில், டார்ச், லைட் அடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும், 7 கிலோ மீட்டர் கரடுமுரடான மலைச்சாலையிலேயே நள்ளிரவில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கோவிந்தனின் உடலை சுமந்து சென்றனர்.
மேலும், நெக்னாமலை மலைகிராமத்திற்கு சாலை வசதி வேண்டி மலைகிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி, மலைகிராம மக்களே, தற்காலிகமாக மண் சாலை அமைத்த நிலையில், கடும் மழை மற்றும் இயற்கை சீற்றத்தினால், மலைச்சாலையில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக இருக்கும் நிலையில், மலைக்கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவர்கள், தங்கள் கடும் அவதியடைந்து வந்த நிலையில், சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராம மக்களுக்காக, அவசர தேவைக்கு, இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கிய நிலையில், தற்போது மலைச்சாலை மிகவும் மோசமான நிலையில், உள்ளதால், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நெக்னாமலை மலைகிராமத்திற்கு, சாலை வேண்டி, மலைகிராம மக்கள் அனைத்துதுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், ஆட்சியர் முதல் அமைச்சர் வரை மலைகிராமத்தில் ஆய்வு செய்தும், இதுவரையில், அதிகாரிகள், நெக்னாமலை மலைகிராமத்திற்கு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென மலைகிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே இந்த மலை கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக 7 கிலோமீட்டர் தூரம் மலையடி வாரத்திற்கு வந்து பொருட்களை வாங்கி செல்வதாக நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பிரத்தியோக காட்சிகளுடன் செய்தி வெளியானதை தொடர்ந்து உடனடியாக மலை கிராமத்திலேயே ரேஷன் கடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.