திருவள்ளூர்: ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு
திருவள்ளூர் அருகே ஆதி திராவிடர்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மறியல் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையை அடுத்த ராஜாநகரம் மேற்கு கிராமத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 100 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 25 ஆண்டுகளாக அங்கு வீடுகட்டி குடியேற முடியாத நிலையே நீடிக்கிறது.
இந்நிலையில் ஆதிதிராவிடர்கள் வீடு கட்டிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து, அங்கு வருவாய் துறையினர் நில அளவை பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடுத்து சாலையிலேயே சமைக்கவும் தொடங்கினர். இதனால் அங்கு சுமார் 200 காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதனிடையே திருத்தணி கோட்டாட்சியர் சத்யா, இலவச வீட்டு மனை விவகாரத்தில் இரு தரப்பினரின் மனுக்களையும் பெற்று, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனக் கூறியதால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.