அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்
அறந்தாங்கி அருகே அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் மாலையில் தானியங்களும் கிராம மக்கள் வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 11, 12 ஆகிய வகுப்புகளில் சுமார் 116 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கிராமத்தில் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் ஆதாரம் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னாள் மாணவர்கள் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பட பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் மாலையில் மாணவ-மாணவிகளுக்கு தானியங்கள், பிஸ்கட் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறும்போது, “காலை 7 மணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விடுகின்றனர். அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பும் அவர்களில் சிலர் சாப்பிடாமலேயே வந்து விடுவதால் சோர்வடைந்து விடுகின்றனர்.
மாணவர்கள் களைப்படையாமல் படிப்பதற்காக தினசரி இட்லி, பூரி, பொங்கல் உள்ளிட்ட காலை உணவுகளை மாறி மாறி வழங்கி வருகின்றோம். மாலை 6 மணி வரை பிள்ளைகள் பள்ளியில் படிப்பதால் அவர்கள் களைப்படைந்து விடாமல் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் தானியங்கள் அதனுடன் பிஸ்கட் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியோடு வழங்கப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு சுமார் 2,300 வரை செலவாகிறது. இதற்காக கிராம மக்களும் தங்களது பங்களிப்பை போட்டிபோட்டுக் கொண்டு வழங்கி வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இது போன்ற பங்களிப்பை ஒவ்வொரு கிராம மக்களும் செயல்படுத்தினால் நிச்சயமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண் விகிதம் உயரும்” எனத் தெரிவித்தனர். அரசு பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு கிராமமே செயல்படும் விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
முழு ஒத்துழைப்பையும் ,கேட்டதையெல்லாம் பெற்றுத் தருகின்ற அளவில் பெற்றோர் ஆசிரியர் கழகமும் முன்னாள் மாணவர்களும் உதவி செய்து வருவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.