\
Actor Vijay Last Movie JanaNayagan Relesed from TN
Jana NayaganPT

விஜய் சொன்ன 'குட் டச்; பேட் டச்'! ஜனநாயகன் பார்த்து விட்டு பாலியல் அத்துமீறலை கூறிய சிறுமி!

"ஜனநாயகன்" திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், நடிகர் விஜய் பள்ளி குழந்தைகளிடம் "குட் டச், பேட் டச்" என்றால் என்ன என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுவார்.
Published on

முதல்வர் விஜய் நடித்து சமீபத்தில் "ஜனநாயகன்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், நடிகர் விஜய் பள்ளி குழந்தைகளிடம் "குட் டச், பேட் டச்" என்றால் என்ன என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுவார். இந்தக் காட்சியைப் பார்த்து, சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

POCSO
POCSO X

சென்னையைச்ச் சேர்ந்த தம்பதியினருக்கு 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் உள்ளனர். சிறுமியின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சிறுமியின் தாய் கோடம்பாக்கத்தில் உள்ள பெரியன் என்பவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது கணவரின் வீட்டிற்குச் சென்று தனது குழந்தைகளைப் பார்த்து வருவதுடன், சில நேரங்களில் குழந்தைகளை தான் வேலை செய்யும் வீட்டிற்கும் அழைத்து வந்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி சிறுமியின் தந்தை தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு முதல்வர் விஜய் நடித்த "ஜனநாயகன்" திரைப்படத்தை பார்க்கச் சென்றுள்ளார்.அப்போது சிறுமி, தனது தந்தையிடம் ஒரு விஷயம் கூற வேண்டும் என்றும், தன்னை திட்டக்கூடாது என்றும் கூறியுள்ளார். பின்னர், திரைப்படத்தில் விஜய் அங்கிள் கூறியது போல, தனது தாய் பணிபுரியும் வீட்டில் பெரியன் என்பவர் தன்னை தவறாக தொட்டதாக தெரிவித்துள்ளார்.

கைது
கைதுகோப்புப்படம்

தனது மனைவி வேலை செய்யும் வீட்டின் உரிமையாளரால் தனது குழந்தை பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பெரியன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்படங்கள் சில நேரங்களில் சமூகத்தின் எதிர்மறையான விஷயங்களை எடுத்துக்காட்டினாலும், அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கருத்துகளையும் எடுத்துச் சொல்கின்றன என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com