தவெக பரப்புரை| விஜய் அவருக்கான ஸ்டைலில் பேசியிருக்கிறார்.. பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!
சுற்றுப்பயண பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரட்டுபட்டி அருகே தேமுதிக 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கும் நிலையில், அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கழக கொடியேற்றி கேக்வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, “ஜனவரி 9 ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் எங்களின் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி உள்ளிட்ட அனைத்து கேள்விக்கு பதில் அறிவிப்போம். பிரசாரத்தை தொடங்கி உள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் அவ்வாறு தான் அவர் நடந்து கொள்வார். அதே போல் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார், அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாதா?.
அவரை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ, ஆலோசனை சொல்லவோ நாங்கள் இல்லை. அவர் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார். இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த். புதிதாக வருபவர்களுக்கு எல்லா சவால்களும் இருக்கும். சவால்களை முறியடித்து வெற்றி காணும் போதுதான் அது மக்களால் அங்கீகரிக்கப்படும். திரைத்துறையில் இருந்து வருபவர்கள் பிரபலமானவர்கள், அதனால் தான் நெருக்கடிகள் அதிகம். ஆனால், நாங்கள் அதையெல்லாம் பார்த்தவர்கள்” என்று கூறினார்.