6 மாநிலங்களில் களமிறங்கும் விசிக .. வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார் திருமாவளவன்! முழுவிபரம்

”ஒரே கட்சியாகவே இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் நலன்களின் அடிப்படையில்தான் கட்சியின் மாநில நிர்வாகம் முடிவு செய்யும். கோரிக்கை வைப்பது நம் கடமை. தீர்வை சொல்வது இந்திய ஒன்றிய அரசின் கடமை” - திருமாவளவன்
திருமாவளவன்
திருமாவளவன்pt web

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் வருகின்ற நாாளுமன்ற தேர்தலில் ஆந்திரா, கர்நாடகா, கேரளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

முன்னதாக புதிய உழைப்பாளர் கட்சி என்ற கட்சியை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிமுகப்படுத்தினார். மறைந்த வன்னியர் தலைவர் ராமசாமி படையாச்சி மகன் ராமதாஸ் இந்த கட்சியை தொடங்கினார். இந்த கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணியை ஆதரித்து பிராச்சாரம் மேற்கொள்ளும் எனவும் குறிப்பாக விசிக போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சார பணிகளை மேற்கொள்ளும் என கூறினார்.

#BREAKING | 6 மாநிலங்களில் விசிக வேட்பாளர்கள் போட்டி: திருமாவளவன்
#BREAKING | 6 மாநிலங்களில் விசிக வேட்பாளர்கள் போட்டி: திருமாவளவன்

அவர் கூறுகையில், “அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பை கருதி இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறது புதிய உழைப்பாளர் கட்சி. புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் இந்த அரசியல் இயக்கத்தை முதன்மையான குறிக்கோள்கள். சாமியின் பெயரால் இந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்த கூடாது. உழைக்கும் மக்களின் உழைப்பே சுரண்ட கூடாது. வன்முறை கூடாது சமூக நல்லிணக்கம் தேவை என்பதை இக்கட்சி முன்னெடுக்கிறது; விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது” என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் பேசியதாவது, “கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்கள் நிறுத்தினோம். கர்நாடகாவில் ஏற்கனவே 30 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினோம். ஆனால் காங்கிரசுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக வேட்பாளர்களை திரும்பி பெற்றோம். இந்த தேர்தலில் ஆந்திராவில் மட்டும் தான் INDIA கூட்டணித் தலைவர்களோடும், மாநிலத் தலைவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் கணிந்துள்ளது. பிற மாநிலங்களில் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. விசிக போட்டியிடும் தொகுதிகள் ஆனது காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

#BREAKING | 6 மாநிலங்களில் விசிக வேட்பாளர்கள் போட்டி: திருமாவளவன்
#BREAKING | 6 மாநிலங்களில் விசிக வேட்பாளர்கள் போட்டி: திருமாவளவன்

ஆந்திராவில் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நாடாளுமன்ற தொகுதிகளும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். அதற்கான சூழல் நடைபெறவில்லை என்றால் மாநில நிர்வாகிகள் கூடி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு தேர்தல் நடைபெற்ற பிறகு ஆந்திராவில் தேர்தல் நடைபெறுவதற்கு காலங்கள் உள்ளது; அதற்குள் நாங்கள் முடிவெடுப்போம். ஒரே கட்சியாகவே இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் நலன்களின் அடிப்படையில்தான் கட்சியின் மாநில நிர்வாகம் முடிவு செய்யும். கோரிக்கை வைப்பது நம் கடமை. தீர்வை சொல்வது இந்திய ஒன்றிய அரசின் கடமை.

தமிழ்நாட்டின் தேவையை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டின் விசிக தண்ணீர் தரவேண்டும் என வலியுறுத்தினால், கர்நாடக நலன்களை கருத்தில்கொண்டு தான் கர்நாடக விசிக முடிவு செய்ய முடியும்” என்றார்.

மேலும், “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது; அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் நேரத்தில் அவரை கைது செய்ததன் மூலம் INDIA கூட்டணிக்கு ஆதரவான நிலை தான் தேசிய அளவில் உருவாகி இருக்கிறது. தோல்வி பயத்தால் பாஜக எதிர்க்கட்சிகள் மீது அடக்கு முறையை ஏவுகிறது. இரண்டு முதலமைச்சர்களை கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிற அளவிற்கு பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது.

தெலங்கான முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளையும் கைது செய்துள்ளார்கள். பிஆர்எஸ் பாஜகவிற்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை; பிஆர்எஸ் INDIA கூட்டணியில் கூட இணையவில்லை. என் டி ஏ கூட்டணிகள் சேர அச்சுறுத்துகிறது. விசாரணை நிறுவனங்களை ஏவிவிட்டு பாஜக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி கூட்டணிகள் சேர்க்க வைக்கிறது அல்லது தேர்தல் நிதிகளைப் பெறுகிறது. தேர்தல் பத்திரம் ஊழல் என்பது இதுவரை நிகழாத மிகப்பெரிய ஊழல். சட்டபூர்வமாக ஊழலை அங்கீகரித்து இருக்கிறது பாஜக. நல்ல வேலையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு தேர்தல் பத்திரமூலம் பெற்ற நன்கொடை ஏற்புடையதல்ல என கூறி இருக்கிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைதுமுகநூல்

மிக முக்கியமான கார்ப்பரேட் நிறுவனங்களை, அரசியல் தலைவர்களை விசாரணை நிறுவனங்கள் மூலமாக அமலக்கத்துறை, வருவாய் வரித்துறை மூலமாக பாஜக அச்சுறுத்துவது பாசிசத்தின் உச்சம். பாஜக மீது பணமோசடி தடுப்புச் சட்டம் மூலம் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பத்திரத்தின் ஊழல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்திருக்கிறது.

பாஜக, அதிமுகவை கூட்டணியில் இணைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவர்களால் 2019 ஆம் ஆண்டு உருவாக்கிய கூட்டணி போல உருவாக்க முடியவில்லை. அதிமுகவை தனிமைப்படுத்துவதுதான் அவர்களது நோக்கம். அதிமுக தொண்டர்கள், அதிமுக வாக்காளர்கள் இதை உணர்ந்து கொள்வது தேவையான ஒன்று.

'INDIA' கூட்டணி
'INDIA' கூட்டணி புதிய தலைமுறை

INDIA கூட்டணியால் தான் இந்த தேர்தலில், தேசத்தை, ஜனநாயகத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க முடியும். இந்த தேர்தல் இந்திய நாட்டு மக்களுக்கும் சங் பரிவார் கும்பலுக்கும் நடக்கும் கருத்தியல் யுத்தம்” என தெரிவித்தார்.

கர்நாடகவில் 6 தொகுதிகள்

கேரளாவில் 5 தொகுதிகள்

தெலுங்கானாவில் 10 தொகுதிகள்

மகாராஷ்டிராவில் 1 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பானை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com