தங்கப்பதக்கம் வழங்க போதிய நிதி இல்லையா? விழாவில் நடந்ததென்ன? - சென்னைப் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்

போதிய நிதி இல்லை என்பதால் பதக்கம் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
chennai university
chennai universitytwitter

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும், தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100 பேருக்கும் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப் பல்கலை மாணவர்கள்
சென்னைப் பல்கலை மாணவர்கள்புதிய தலைமுறை

இன்றைய விழாவின்போது, பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு பதக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. இதுபற்றி கேட்டபோது போதிய நிதி இல்லை என்பதால் பதக்கம் வழங்கப்படவில்லை என நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, விழா நடைபெற்ற இடத்தில் நிர்வாகத்துடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இந்த தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “தங்கப்பதக்கம் வழங்க நிதி பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல் தவறானது. தகுதியான நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைவேந்தர் கெளரி
துணைவேந்தர் கெளரிபுதிய தலைமுறை

விழா ஏற்பாடுகளில் சில சில குளறுபடிகள் இருந்திருக்கலாம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிய அரங்கத்தில் நடத்தப்பட்டதால் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களால் பட்டம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிகழ்வில் எந்தவித குளறுபடிகளும் நடைபெறவில்லை.

குடியரசுத் தலைவர் வருகையால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். தொலைதூர கல்வி நிலைய முறைகேடு புகாரானது பழைய புகார், அது விசாரணையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com