வேலூரில் அத்தியாவசிய தேவைகளின் கடைகள் திறப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டில் மாற்றம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் வேலூரில் ஊரடங்கு உத்தரவுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அந்த வகையில், மளிகைக் கடைகள் அனைத்தும் வாரத்தின் திங்கள், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் மட்டுமே திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் இறைச்சிக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கக் கூடாது எனவும் அத்தியாவசிய தேவையான பால் கடைகளை மட்டும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறப்பதற்கு அனுமதி அளித்திருந்தார். இதுதவிர காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றை தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் வேலூரில் அத்தியாவசிய தேவைகளின் கடைகள் திறப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டில் மாற்றம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் காய்கறி, பால், பெட்ரோல், பேக்கரிகள் ஆகியவை தினசரி காலை 07.00 மணி முதல் 12.00 வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய 3 நாட்கள் காலை 07.00 மணி முதல் 12.00 வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.