தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்துவரும் மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, காய்கறிகளின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்ததால், விலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சமீபகாலமாக பெய்து வரும் மழை காரணமாக தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது.
எனவே, கடந்த வாரத்தில் கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 30 ரூபாயாகவும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், பாகற்காய் 50 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது. இதுதவிர, வெங்காயம், உருளைக்கிழங்கு, அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.