வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ மா.மீனாட்சிசுந்தரம் இன்று அதிகாலை காலமானார்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மா.மீனாட்சிசுந்தரம். இவர் வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தற்போது நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்தார். மேலும் வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர் இணையத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி திமுக சார்பில் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.
மீனாட்சி சுந்தரத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் புகழேந்தி, அன்பரசு என்ற இரு மகன்களும் உள்ளனர். இன்று மாலையில் சொந்த ஊரான ஆயக்காரன்புலத்தில் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையும் படிக்க: தொட்டில் புடவையில் கழுத்து இறுகி சிறுவன் பலி!