வேடந்தாங்கல் சரணாலயத்தை மேம்படுத்தவே பரப்பளவு குறைப்பு : தமிழக அரசு
வேடந்தாங்கல் சரணாலயம் அமைந்திருக்கும் பகுதிகளை மேம்படுத்தவே சுற்றுப்புற பரப்பளவை குறைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் சன் பார்மா நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக சன் பார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய கடந்த மாதம் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சரணாலயம் அமைந்திருக்கும் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே 5 கி.மீட்டர் என்ற சுற்றுப்புற பரப்பளவை 3 கி.மீட்டராக குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். மேலும், மனுதாரர் வேடந்தாங்கள் நிலபரப்பு குறைக்கபடுவதற்கு எதிராக அரசிடம் மனு அளித்துக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.