விவேக் மறைவு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமே பேரிழப்பு - அரசியல் தலைவர்கள் இரங்கல்
நடிகர் விவேக் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது.
டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். விவேக்கின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர்: 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ந் தேதி தனது இல்லத்திற்கு என்னை மிகுந்த வாஞ்சையுடன் அழைத்திருந்தார். என்மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும், பாசமும் வைத்திருந்த தம்பி சின்னக் கலைவாணர் என பலரால் பாராட்டப்படும் நடிகர் விவேக் மரணம் மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
திருமாவளவன், விசிக தலைவர்: நடிகர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருக்கு எமது அஞ்சலி.
ரவிக்குமார், விழுப்புரம் தொகுதி எம்பி: நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி மனதை கலங்கச் செய்கிறது. ஹீரோக்கள் ஜோக்கர்களாக அம்பலப்பட்டு நிற்கும் இந்த காலத்தில் சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக’ உயர்ந்தவர். அவருக்கு என் அஞ்சலி !