வாணியம்பாடி | இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் ரூ.3.50 லட்சம் வழிப்பறி செய்த முகமூடி கும்பல்
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் முகமது சுஹேப் என்பவர், மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று விற்பனையை முடித்துவிட்டு, 3.50 லட்சம் ரூபாய் பணத்தை பையில் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பெருமாள் பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வேகமாக வந்த கார், முகமது சுஹேப் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. அதனை தொடர்ந்து காரில் முகமூடி அணிந்தபடி வந்த இருவர், முகமது சுஹேப் பையில் வைத்திருந்த 3.50 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து முகமது சுஹேப் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், வழிப்பறி சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.