வாணியம்பாடி | ஓடும் பேருந்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி - ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட ஜவ்வாது மலைத்தொடரில் உள்ள தோனியூர் ஜார்தான்கொல்லை மலை கிராம பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர் - நிர்மலா தம்பதியர். இவர்களுக்கு மோகித் என்ற 4 வயது மகன் உள்ள நிலையில், இவர்கள் கர்நாடக மாநிலம் சிக்மங்களுார் பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த நிர்மலா, பிரசவத்திற்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெகுந்தி சுங்க சாவடியில் நிர்மலாவிற்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பணியில் இருந்த சுங்கச் சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் நிர்மலாவை, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ்லேயே நிர்மலாவுக்கு பிரசவவலி அதிகமாகி ஆண் குழந்தை பிறந்துள்ளது, இதைத் தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.