முதன்முறையாக இந்திய பெண்ணுக்கு பென் நர்சிங் விருது!
பென் நர்சிங் ரென்ஃபீல்ட் அறக்கட்டளை விருது மருத்துவத்துறையில் சேவை ஆற்றி வரும் வந்தனா கோபிகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல்முறையாக இந்த விருதினை பெறவுள்ளார். வந்தனா கோபிகுமார் மற்றும் வைஷ்ணவி ஜெயக்குமார் இருவரும் இணைந்து 1993ம் ஆண்டு `பான்யன்’ எனும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ ரீதியான தீர்வையும் வாழ்வாதாரத்தையும் ‘பான்யன்' அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இந்நிலையில், பென் நர்சிங் ரென்ஃபீல்ட் அறக்கட்டளை விருது வந்தனா கோபிகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மார்ச் 21-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. விருதுடன் 63,62,500 ரூபாய் ரொக்கமும்(ஒரு லட்சம் டாலர்) பரிசாக வழங்கப்படும்.
25 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிந்து வருவதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பென் நர்சிங் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வந்தனா கோபிகுமார் பென் நர்சிங் விருது பெற்றுள்ளதற்கு திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.