இந்தி இருக்கலாம், தமிழ் கூடாதா: வைரமுத்து கேள்வி
ராஜஸ்தானிலும், உத்தரப்பிரதேசத்திலும் நீதிமன்றங்களில் இந்தி மொழியில் தீர்ப்பு சொல்லும் போது, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மட்டும் நீதிமன்ற மொழியாக இருக்க முடியாதா என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் மறைமலைஅடிகள் குறித்த ஆய்வு கட்டுரையை அரங்கேற்றி பேசிய போது கவிஞர் வைரமுத்து இவ்வாறு கூறினார். வைரமுத்து பேசுகையில், “நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் திகழ வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு. குடியரசுத் தலைவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். தாய் மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் குரல்கொடுத்த பின்னும் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க மத்திய அரசு அண்மையில் மறுத்திருக்கிறது.” என்று கூறினார்.
மேலும், தமிழ்மொழிக் கொள்கையை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு வைரமுத்து வலியுறுத்தினார். விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா, நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.