ஓஎன்ஜிசி நிறுவனத்தை தமிழ்நாட்டை விட்டே விரட்டுவேன் என்றும், கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வாகனங்கள் வெளியேறாவிட்டால் அடித்து நொருக்குவோம் என்றும் வைகோ கூறியுள்ளார்.
கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்காக பூமியில் புதைக்கப்பட்ட குழாயில் இருந்து திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனைக் கண்டித்தும் ஒஎன்ஜிசி முற்றிலுமாக கிராமத்தில் இருந்து வெளியேறக் கோரியும் கடந்த சில மாதங்களாக கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டிவிடுவது நான்தான்; வேண்டுமென்றால் வழக்கு தொடருங்கள் என ஆவேசமாக கூறினார். தமிழகத்தை விட்டே ஓஎன்ஜிசியை விரட்டுவேன் என சூளுரைத்த அவர், ஓஎன்ஜிசிக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி போராடுவேன். கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வாகனங்கள் வெளியேறாவிட்டால், அடித்து நொறுக்குவோம் எனவும் அவர் கூறினார்.