பி.இ படிப்புகளுக்கு வேதியியலை கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீட்டிக்க வைகோ கோரிக்கை

பி.இ படிப்புகளுக்கு வேதியியலை கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீட்டிக்க வைகோ கோரிக்கை

பி.இ படிப்புகளுக்கு வேதியியலை கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீட்டிக்க வைகோ கோரிக்கை
Published on

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் இடம் பெறாதது கண்டனத்துக்கு உரியது என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது அண்மையில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) கல்வி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மேல்நிலை வகுப்பில் வேதியியல் படித்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் வேதியியல் மதிப்பெண்களை கணக்கிட வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும் என்றும் அதேபோல பொறியியல் கல்விக்கான பாடங்களை மாணவர்களின் விருப்பத் தேர்வுக்கு விட்டுவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கல்வித் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த அறிவிப்பு மாணவர்களைக் கடுமையாகப் பாதிப்பதுடன், மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதியியல் பயிற்றுவிக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், ஆகியோர்களின் வேலைவாய்ப்பினை இழக்க வழிவகுத்துள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வில், 500-க்கு 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க வேண்டும். அப்படி படிப்பவர்கள் மட்டுமே ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்குத் தகுதி பெறுவர். அதேபோல வேளாண்மைப் பொறியியல், கட்டுமானம், வேதியியல் போன்ற தொழில்நுட்ப கல்விக்கு மேல்நிலை வகுப்பில், வேதியியல் படித்து இருக்க வேண்டும்.

ஆனால், புதிய அறிவிப்பின்படி, மாணவர்கள், வேதியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுப்பது கட்டாயம் அல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது, வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெருந்தடையாக அமைந்துவிடும். அதன் பின்னர் வேதியியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள, வேற்று நாட்டு அறிஞர்களின் உதவியைத்தான் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

இன்று வேதியியல் அறிவு, அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் தேவையாக இருக்கின்றது. அறிவியல் தொடர்பான எந்தக் கல்விக்கும், தனித்திறன் கொண்ட வேதியியல் அறிஞர்கள் தேவை. வேதியியலில் கட்டாயப் பாடம் என்பது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கைகளில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால், வேதியியல் விருப்பப் பாடம் இல்லை என்றால், அதனால், கலைக்கல்லூரிகளும், பி.எஸ்சி வேதியியல் துறையும் கடுமையான பாதிப்பை உருவாக்கும்.

ஆகவே இந்த அறிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டு, பொறியியல் கல்விக்கான சேர்க்கைகளுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியலை, கட்டாயத் தேர்வுப் பாடங்களாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com