ஓராண்டு சிறை தண்டனை : வைகோ எம்.பி ஆக முடியுமா ? முடியாதா ?
தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ளதால் மதிமுக செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2009ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோவிற்கு எதிராக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. அதன்படி வைகோவிற்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் மதிமுவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வைகோ தேர்வு செய்யப்படயிருந்தார். தற்போது அவர் சிறை தண்டனை பெற்றிருப்பதால் அவர் எம்.பி ஆக முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், “வாய்ப்பு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை இருந்தால் வாய்ப்பு உண்டு. ஓராண்டு என்பதால் அவர் பங்கேற்கலாம் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றால் தான் பதவி வகிக்க முடியாது. அதற்கு குறைவான ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதால் வாய்ப்பு உண்டு. அதற்கு தடைகள் இருக்காது” என்று கூறினார்.

