ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடும் மக்கள் மீது அரசு அடக்குமுறையை கையாள்வது கண்டனத்துக்கு உரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோ கூறுகையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டத்தை ஒடுக்க அரசு நினைக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “மகாராஷ்டிராவில் பட்ட பகலில் மக்கள் சம்மட்டி, கடப்பாரை எடுத்துக் கொண்டு போய் ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறிக்கினர். அங்கிருந்த முதலமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் மீதும் வழக்குப் போடவில்லை. ஆலையின் லைசென்சை ரத்து செய்தார்.
இது மக்கள் எழுச்சி. புற்றுநோய் வருகிறது. சரும நோய் வருகிறது. நுரையீரல் தொற்று நோய் வருகிறது. 50 கிலோமீட்டர் தொலைவிற்கு இனி விவசாயமே செய்ய முடியாது. இந்நிலையில், கண்ணீர் புகைக் குண்டு, தடியடி பிரயோகம், துப்பாக்கிச் சூடு என்பது நடத்துவது பாசிச அரசு. கோடிகளை குவித்து விலைக்கு வாங்க முயல்கிற ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு, காவல்துறை செயல்பட்டிருக்கிறது. இதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கின்றேன்” என்று வைகோ கூறினார்.