”சங்கமிப்போம் சாதிப்போம்”- அதிமுக பொதுச்செயலாளர் அடையாளத்தோடு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்

”சங்கமிப்போம் சாதிப்போம்”- அதிமுக பொதுச்செயலாளர் அடையாளத்தோடு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்
”சங்கமிப்போம் சாதிப்போம்”- அதிமுக பொதுச்செயலாளர் அடையாளத்தோடு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்

ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா, அ.இ.அ.தி.மு.க. கழகப் பொதுச்செயலாளர் என்ற அடையாளத்துடன் தொண்டர்களுக்கு இன்று கடிதமொன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர், ‘கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது தொடர்வோம் வெற்றிப்பயணத்தை. ஒன்றுபடுவோம்... வென்றுகாட்டுவோம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி, நேற்று முன்தினம் தனது இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, சசிகலா, மலர்தூவி மரியாதை செலுத்தியிருந்தார். பின்னர், அதிமுக கொடிகட்டிய காரில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்குச் சென்ற அவர், அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். பொன்விழா ஆண்டு கொடியேற்றும் நிகழ்வையொட்டி கல்வெட்டையும் சசிகலா திறந்து வைத்தார். அதில், அதிமுகவின் பொதுச்செயலாளார் வி.கே.சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர், இப்போதுவரை ‘சசிகலா அதிமுகவை சேர்ந்தவரில்லை’ என்பதில் உறுதியாக இருந்துவருகின்றனர்.

இருப்பினும், இன்று அதே அடையாளத்துடன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

’புரட்சித்தாய் மடல்’ என பெயரிடப்பட்டிருக்கும் தனது அக்கடிதத்தில், “கழகத்தின் பாதையில் புரட்சித் தலைவர் காணாத சோதனையா? புரட்சித்தலைவி, அம்மா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாமறிவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்தது தானே... வெல்வோம் சகோதர்களே. நான் இருக்கிறேன் என்பதைவிடவும் நாமிருக்கிறோம். ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும். அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம். வென்று காட்டுவோம்.

பொன்விழா பிறக்கும் இந்த நாள், கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும். நம் தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காகப் பயணிப்போம். சங்கமிப்போம். சாதிப்போம். தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” எனக்கூறியுள்ளார் சசிகலா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com