உசிலம்பட்டி: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்து - திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழப்பு
செய்தியாளர்: பிரேம்குமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய மாவட்ட திமுக பிரதிநிதியாகவும், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய 4வது வார்டு கவுன்சிலராகவும் இருந்துவந்தார் இவர். இந்நிலையில், இன்று இவர் வத்தலக்குண்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விருவீடு அருகே உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று இவரது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த துரைப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த விருவீடு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தொடர் விசாரணையும் நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.