கையில் குழந்தையுடன் காவல்நிலையத்திற்கு வந்த மணமாகாத பெண்!
திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் ஆகாத பெண் ஒருவர் குழந்தையுடன் வந்து புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் பொன்னுசாமி. இவர் 21 வயது நிரம்பியவர். இவரும் குரூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மகள் பிரியா (19) என்பவரும் கடந்த ஒரு வருடமாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய பொன்னுசாமி, அவருடன் உறவு வைத்துள்ளார்.
இதில் கர்ப்பமான பிரியா, 15 நாட்களுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பொன்னுசாமியிடம் பிரியா வற்புறுத்தி வந்த நிலையில், திருமணம் செய்ய பொன்னுசாமி மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பிரியாவிற்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரியா திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொன்னுசாமியின் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் பொன்னுசாமியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தனர்.