தாமிரபரணி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத சிசு: போலீஸ் விசாரணை
நெல்லையில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசுவின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்றுப்பகுதி பெரும்பாலும் ஆள்நடமாட்டம் இன்றி காணப்படும். ஆற்றில் செடிக்கொடிகள் அடர்ந்து காணப்படும் பகுதியில் ஏதோ மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் சிசு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த 108 ஊழியர்கள் சிசுவை கைப்பற்றி பரிசோதித்தனர். சிசு இறந்து கிடப்பதை அறிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசுவைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குழந்தை ஆற்றில் வீசப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.